ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது: ஓட்டு வேட்டையில் நட்சத்திரங்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில், அனல்பறந்த தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிப்ரவரி 13ஆம் தேதி அங்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவையொட்டி அங்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள். பிரச்சாரம் முடிந்ததும் வெளியூர் ஆட்கள் வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கடிதம்
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் மனதில், தமக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்றும், இல்லந்தோறும் தாமே நேரில் வந்து வாக்கு கேட்பதாகக் கருதி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து, அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை தேடித் தரவேண்டும் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளர். அந்த கடிதத்தை வீடு வீடாக கொடுத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வாக்கு சேகரிக்கின்றனர்.
ஓட்டு வேட்டையில் அமைச்சர்கள்
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட விராலிமலை ஒன்றியம் கோமங்களம், சேதுராப்பட்டி, அலுந்தூர் ஆகிய பகுதிகளில் அமைச்சர்கள் திரு. நத்தம் R. விஸ்வநாதன், டாக்டர் C. விஜயபாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தீவிர பிரச்சாரம்
ஸ்ரீரங்கம் தொகுதி 3-வது வார்டுக்கு உட்பட்ட நரியன்தெரு, ரயில்வே காலனி, சத்தியமூர்த்தி தெரு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம், அரசு தலைமைக் கொறடா திரு. R. மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
செந்தில் பாலாஜி
மணப்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்துப்பட்டி, தேங்குடி, கொட்டப்பட்டி, நரியம்பட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்.
கோகுல இந்திரா
ஆலம்பட்டி, மேக்குடி, ஓலையூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அமைச்சர் திருமதி. S. கோகுலஇந்திரா, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கடிதத்தினை பொதுமக்களுக்கு வாசித்துக் காண்பித்து வாக்கு சேகரித்தார்.
ஸ்பெக்ட்ரம் ரூபாய் நோட்டு
சிறுகமணி பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம், அண்ணாநகர், பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க.வின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், மிகப்பெரிய அளவிலான டம்மி ரூபாய் நோட்டுக்களில் ஆ. ராஜா, கனிமொழி ஆகியோரின் உருவப்படங்களை அச்சிட்டு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு.பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் வாக்காளர்களிடம் வழங்கி கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.
அ முதல் ஃ வரை ஆர்.பி. உதயகுமார்
நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை, அ முதல் ஃ வரையிலான உயிர் எழுத்துக்கள் முன்வரத் தொகுத்து அச்சிட்ட பிரசுரங்களை அமைச்சர் திரு.R.B. உதயகுமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தனர்.
சரத்குமார் எம்.எல்.ஏ
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. R. சரத்குமார், ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். அவருடன், அமைச்சர்கள் திரு. நத்தம் இரா. விசுவநாதன் மற்றும் திருமதி. பா. வளர்மதி ஆகியோர் உடன்சென்றனர். அதனைத்தொடர்ந்து, அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் உடன் வியாழன்மேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திரு. சரத்குமார், இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்ரீதர் வாண்டையார்
செங்குறிச்சி, மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், கழக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பாடகி அனிதா குப்புசாமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நடிகை விந்தியா
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர், கொய்யாதோப்பு, அல்லித்துறை, மாத்தூர், சுண்ணாம்புக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர்கள் திரு. P. பழனியப்பன், திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இவர்கள் தவிர நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, நடிகை குயிலி, சரஸ்வதி ஆகியோரும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஸ்டாலின் பிரச்சாரம்
இப்படியாக அதிமுக வேட்பாளருக்கு அனைவரும் களத்தில் குதித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுகவுக்காக மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளார். அவரது கட்சியினரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள்
திமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் வாசு விக்ரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பாஜக – சி.பிஐ (எம்)
பாஜக வேட்பாளருக்காக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்டு வேட்பாளருக்காக பிரசாரம் செய்ய வந்த தா. பாண்டியனும் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புதன்கிழமை ஓய்கிறது
அனல் பறந்த பிரச்சாரம் புதன்கிழமை மாலை(11ம் தேதி)யுடன் ஓய்கிறது. 13 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
துணை ராணுவம் குவிப்பு
புதன்கிழமை மாலையுடன் ஸ்ரீரங்கம் தொகுதியை சாராத நபர்கள் வெளியேறவேண்டும் என்று தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு போலீசார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.