வன்முறையின்றி, விறுவிறுவென நடந்த ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்.. 82.54 % வாக்குகள் பதிவு!
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இத்தேர்தலில் 82.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வளர்மதி, தி.மு.க.வின் ஆனந்த், பாரதிய ஜனதாவின் சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
காலையில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 53.2 சதவீத வாக்குகள் பதிவாகியது. 3 மணி நிலவரப்படி 65.89 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.
மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 76.89 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆண்கள் 76 சதவீதமும், பெண்கள் 77.8 சதவீதமும் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
முன்னாள் முதல்வரின் தொகுதி என்பதால் வாக்குப் பதிவு ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக இருந்தது. சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவில் சற்று தாமதம் ஏற்பட்டது.
வாக்குப்பதிவின்போது எந்த இடத்திலும் வன்முறை நடக்கவில்லை. போலீஸார் பாதுகாப்பை சிறப்பாக செய்திருந்தனர். சில இடங்களில் லேசான உராய்வுகள் ஏற்பட்டு அவை உடனடியாக சரி செய்யப்பட்டன.
இன்று மாலையே வாக்குச்சாவடிகள் வாரியாக வாக்குப் பெட்டிகள் வரிசை படுத்தப்பட்டு, தேர்தல் அதிகாரிகளின் முன்னால் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள் வருகின்ற 16 ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
கடந்த 2011 பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்குப் பதிவு 82 சதவீதம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது