ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணையதளத்தை முடக்கிய தீவிரவாதிகள்: பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணையதள பக்கத்தை காஷ்மீர் தீவிரவாதிகள் முடக்கியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில மணிநேரங்களுக்குப் பின்னர் இணையதளம் செயல்படத் தொடங்கியதால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.
ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் தற்போது வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. இது பற்றிய விவரங்களை வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் அதன் விவரங்களை பார்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டதால் உலக அளவில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையதள சேவையும் பாதிப்படைந்தது.
புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலக இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த சைபர் லயன் என்ற அமைப்பினர் கடந்த ஆண்டு முடக்கி வைத்து அந்த நாட்டு கொடியை இணையதளத்தில் பதிவேற்றியிருந்தனர்.
இந்திய அரசு துறைகளுக்கு சொந்தமான இணையதளங்களை முடக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சில தீவிரவாதிகள் கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான இணையதளத்தை முடக்கினர்.
இந்நிலையி்ல் காஷ்மீரை சேர்ந்த தீவிரவாத இயக்கத்தினர் ஸ்ரீரங்கம் கோவிலின் வெப்சைட்டை முடக்கி வைத்ததுடன் ஆடியோ ஒன்றையும் ஒலிபரப்பினர். அதில் தாங்கள் கோவிலின் வெப்சைட்டை முடக்கி வைத்திருப்பதாகவும் மேலும் தங்களின் செயலுக்கு பாடம் கற்பிக்க நினைத்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்திருந்தனர். சிலமணிநேரங்கள் செயல்படாமல் இருந்த இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியதை அடுத்து பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.