ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் வஸ்திர மரியாதை - இன்று திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பு
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.
பூலோக வைகுண்டம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்களுக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த வகையில் ஆனி வார விழாவை ஒட்டி திருப்பதி பெருமாளுக்கு வஸ்திர மரியாதை ரங்கநாதர் கோவில் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மன்னர்கள் ஸ்ரீரங்கத்தில் நடந்த படையெடுப்பின் போது உற்சவர் பெருமாள் விக்ரகத்தைப் பாதுகாக்கவும், எதிரிகளின் கையில் சிக்காமல் இருக்கவும் திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோவிலில் 50 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதியன்று வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்படுகிறது.
இதை முன்னிட்டு நேற்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து வஸ்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதில் பெருமாள் வஸ்திரங்கள், குடைகள், மலர்கள், முக்கனிகள், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் வைக்கப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கோவில் யானை ஆண்டாள் வரவழைக்கப்பட்டு யானை மீது ஒரு வஸ்திர தட்டை வைத்தனர். மற்ற தட்டுக்களை கோவில் பணியாளர்கள், பட்டர்கள், அறங்காவலர்கள் கையில் எடுத்துக் கொண்டு நான்கு உத்திர வீதிகளில் வீதி உலா வந்தனர்.
பிறகு கோபுர வாசலை அடைந்த ஊர்வலத்திலிருந்து வஸ்திர மரியாதை சாமன்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று வஸ்திர மரியாதை திருப்பதி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.