ஆண்டாள் விவகாரம்: 'கேப்' விட்டு மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளார்.
ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர் என்கிற கருத்தும் உண்டு என ஆய்வு ஒன்றை தமது கட்டுரையில் மேற்கோள் காட்டி இருந்தார் கவிஞர் வைரமுத்து. இப்படி கூறியதன் மூலமே ஆண்டாளை இழிவாக பேசிவிட்டார் என ஒரு சமூகம் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக வைரமுத்து இரு முறை வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிராக வன்முறை பேச்சுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஜீயரின் உண்ணாவிரதம்
வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் என அறிவித்தார். ஆனால் போராட்டத்தை அவரால் தொடர முடியாமல் முடித்துக் கொண்டார்.
மன்னிப்பு கேட்ட ஜீயர்
பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜீயர், எங்களுக்கும் சோடாபாட்டில் வீச தெரியும் என பேசி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து இப்பேச்சுக்காக ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என அறிவித்தார் ஜீயர். தம்மைப் போலவே வைரமுத்துவும் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்கவும் அவர் வலியுறுத்தினார்.
ஜகா வாங்கிய ஜீயர்
மேலும் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் பிப்ரவரி 3-ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்தார் ஜீயர். ஆனால் திட்டமிட்டபடி கடந்த 3-ந் தேதி ஜீயர் உண்ணாவிரதத்தை தொடங்கவில்லை. தாம் பக்தர்களிடம் ஆலோசித்து அறிவிக்கிறேன் என ஜகா வாங்கினார்.
மீண்டும் பிரச்சனை
இந்நிலையில் ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக ஜீயர் அறிவித்திருந்தார். இதன்படி இன்று காலை ஜீயர் உண்ணாவிரதத்தைத் தொடங்கி உள்ளார்.