'சாந்தி விமோசன' இடைவேளையுடன் நடத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்
3 வேளை சாந்தி விமோசனம் என கூறி ஓய்வெடுத்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நடத்திய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது.
Recommended Video
ராஜபாளையம்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் 2-வது முறையாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. ஜீயர் உண்ணாவிரதத்தை நடத்திய போது சாந்தி விமோசனம் என கூறி 3 வேளையும் அரை மணிநேரம் ஓய்வு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் இறைவனுக்காக வாழ்ந்த தேவதாசி என ஆய்வாளர்கள் குறிப்பிடுவதாக கவிஞர் வைரமுத்து கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆண்டாளை கவிஞர் வைரமுத்து இழிவுபடுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒரு சமூகம் போராட்டத்தில் குதித்தது. இது தொடர்பாக வைரமுத்து விளக்கம் அளித்த பின்னரும் தொடர்ந்து போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன.
திடீர் வாபஸ்
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் திடீரென அந்த போராட்டத்தைக் கைவிட்டார் ஜீயர்.
சோடா பாட்டில் பேச்சு
இதையடுத்து வைரமுத்துவுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் ஜீயரும் கலந்து கொண்டார். அப்போதுதான் சோடா பாட்டில் வீச தெரியும் என ஜீயர் பேசி சர்ச்சையானது. இதையடுத்து தம்முடைய பேச்சுக்காக ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றார் ஜீயர்.
ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்
இந்நிலையில் நேற்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஜீயர். அடங்கிப் போயிருந்த ஆண்டாள் விவகாரத்தில் ஜீயரை உசுப்பிவிடுவதன் பின்னணியில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள் பிரமுகர் ஒருவர்தான் இருப்பதாகவும் கூறப்பட்டது.
உண்ணாவிரதம் வாபஸ்
இந்த உண்ணாவிரதத்தையும் இன்று பிற்பகல் ஜீயர் முடித்துக் கொண்டார். உண்ணாவிரதம் இருந்த போது ஜீயர் 3 வேளைகளிலும் 'சாந்தி விமோசனம்' என கூறிவிட்டு அரை மணிநேரம் ஓய்வெடுத்தாராம். அரை மணிநேர ஓய்வுக்குப் பின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்திருக்கிறார் ஜீயர்.