விஜயகாந்த் மச்சான் சுதீஷூக்கு “அரெஸ்ட் வாரண்ட்”.. பண மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு..
ஸ்ரீவில்லிபுத்தூர்: நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் கொடுக்காத வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஸூக்கு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்திற்கு நெல்லை மாவட்ட விநியோக உரிமை பெற்றிருந்தார்.
இதில் இவருக்கும் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்-சுதீஸ் ஆகியோருக்கும் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் தர வேண்டும்.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.29 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த பணத்தை விஜயகாந்த்-சுதீஸ் ஆகியோரிடம் திரும்பக் கேட்டபோது, அவர்கள் தர மறுத்துவிட்டார்கள் என மாரியம்மாள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் சுதீஸ் மீது மாரியம்மாள், வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே விஜயகாந்த் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜயகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சுதீஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி பசும்பொன் சண்முகையாக சுதீஷூக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத சுதீஷூக்கு கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து மே மாதம் 27 ஆம் தேதி சுதீஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். மீண்டும் ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகவில்லை.
இதனையடுத்து ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. இதனால் சுதீஷ் மீது இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.