எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் துவக்கம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று துவங்க உள்ளன. இதனையடுத்து ஆசிரியர்களும், மாணவர்களும் இறுதிகட்ட மும்முரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இத்தேர்வானது ஏப்ரல் 13 ஆம் தேதியன்று முடிவடைகின்றது. கிட்டதட்ட 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர் மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.
கடந்தாண்டு ஆங்கிலம் வினாத்தாளில் பல பிழைகள் இருந்தன. இந்த ஆண்டு வினாத்தாள் பிழைகள் இல்லாமல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல் கடந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் ஏராளமானோர் சென்டம் எடுத்தனர். அதை கட்டுப்படுத்த இந்த ஆண்டு அறிவியல் வினாத்தாள் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மார்ச் 4 இல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. மொழிப்பாட தேர்வுகள் முடிந்து இன்று முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன. மேலும் இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது.
முதல் நாளான இன்று விடைத்தாள் திருத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மார்ச் 16 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. தேர்வுகள் முடிய முடிய அந்தந்த பாடங்களுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.