பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மனப்பாட முறைக்கு டாட்டா... பொது அறிவு கேள்விகள் அறிமுகம்
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பிளஸ்-2 பாடங்களை மனப்பாடம் செய்து பொதுத்தேர்வுகளில் அதிக மார்க்குகள் பெற முடிகிறது.
இதனால், சமீப காலமாக பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடங்களில் அதிக மாணவர்கள் இடம் பெறுகின்றனர். பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்று பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்கள் அங்கே ‘ஸ்கோர்' பண்ண முடியாமல் திணறுகின்றனர்.
எனவே, பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டங்களை மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டங்களுக்கு இணையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் ‘மனப்பாடம்' முறையை ஓழித்து, புதிய முறையை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக சி.பி.எஸ்.சி.யின் ஓய்வு பெற்ற சென்னை மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
இதையடுத்து, பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இன்று (3ஆம் தேதி) சென்னையில் மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இறுதி அறிக்கை தயார் செய்யும் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ''பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சீட் கிடைத்தாலும், அங்கு தேர்ச்சி பெறுவதில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் பாடத்திட்டத்துடன், சிந்தித்து வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் தேர்வு முறைகள் இருக்க வேண்டும் என முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முதலில், பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் நடைமுறைப்படுத்திவிட்டு, படிப்படியாக ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பிற்கும் விரிவுப்படுத்தவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம், அடுத்த கல்வியாண்டு அதாவது 2015-2016 முதல் மாற்றம் செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் டாக்டர் கண்ணப்பன் தெரிவித்தார்.