முகம் சுளிக்காமல் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள்.. 3வது இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி நெகிழ்ச்சி
நெல்லை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை அரசு பள்ளி மாணவி மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் நெல்லை டவுண் மாநகராட்சி கல்லணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி முருகபிரியா 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் வந்துள்ளார். இவர் தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என மதிப்பெண் எடுத்துள்ளார்.
சாதனை மாணவி முருகபிரியா நெல்லை டவுனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை சங்கரலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். தாய் ராஜம் இல்லதரசி. மாணவி முருகபிரியா மூன்றாம் இடம் பிடித்ததை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பள்ளி தோழிகள் பள்ளிக்கு முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து அம்மாணவி முருகபிரியா கூறுகையில், ‘10ம் வகுப்பு தேர்வில் மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் ஆகியோர் கொடுத்த ஊக்கம் எனக்கு நல்ல உத்வேகத்தை தந்தது.
பாடம் தொடர்பாக அதிகப்படியாக பயிற்சி எடுத்ததால் தான் சாதிக்க முடிந்தது. எந்த ஒரு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆசிரியர்களை சந்தித்து நிவர்த்தி செய்து கொள்வேன். அவர்களும் முகம் சுளிக்காமல் சொல்லி கொடுத்தனர். பிளஸ்டூவிலும் இதே பள்ளியில் படித்து சாதனை படைப்பேன்' என்றார்.
மாநில, மாவட்ட அளவில் பல மாணவிகளை இந்த பள்ளி தந்து வருவதால் அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 6ம் வகுப்பில் மாணவிகளை சேர்க்க 500க்கும் மேற்பட்ட பெற்றோர் திரண்டது குறிப்பிடத்தக்கது.