எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5456 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 3 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 91.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தையும் , ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.மொத்தம் 9.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களுள் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 96.42 சதவீதமும், ஆங்கிலத்தில் 96.50 சதவீதமும், அறிவியலில் 98.47 சதவீதமும், சமூக அறிவியலில் 96.75 சதவீதமும், கணிதத்தில் 96.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
88.84 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 பேர் பெற்றுள்ளனர். அதுபோல் 451- 481 மதிப்பெண்கள் வரை 56,837 பேரும், 426- 450 மதிப்பெண்கள் வரை 64,144 பேரும் எடுத்துள்ளனர்.
10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.