எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது: சிவகுமார், பிரேமசுதா முதலிடம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் சிவகுமார், பிரேமசுதா ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 13ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ, மாணவியர் எழுதினார்கள்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி காலை வெளியிடப்படும். tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
அறிவிதித்தபடி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சிவகுமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மாணவி பிரேமசுதா ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.