"டார்ச்சர்" செய்கிறார்.. தருமபுரி கலெக்டர் மீது 10ம் வகுப்பு மாணவி பரபரப்பு புகார்!
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவோகனந்தன் மீது குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சென்னை: மாவட்ட கலெக்டர் மீது பத்தாம் வகுப்பு மாணவி புகார் அளித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி சங்கமப்ரியா, தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவோகனந்தன் மீது குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அந்த புகாரில் கூறியுள்ளதாவது: மாவட்ட கலெக்டர் விவோகனந்தன், தர்மபுரி மருத்துவமனை கல்லூரி டீன் சாமிநாதன், அவரது அலுவலக ஊழியர்கள் மூலம் 24ந் தேதி இரவு 8 மணிக்கு விசாரனைக்கு வரவேண்டும் என்று சம்மன் கொடுத்தார்.
விசாரணைக்கு அழைப்பு
தேர்வு நேரம் என்பதால் விசாரணைக்கு நான் செல்லவில்லை, ஆனால் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தபடியே இருந்தனர். கலெக்டர் உத்தரவால்தான் எனக்கு தொல்லை கொடுக்கப்படுகிறது. கலெக்டரின் தொடர் நெருக்கடியில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி மகள்
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சங்கமப்ரியா, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சிஇஓ) மகேஸ்வரியின் மகள் ஆவார்.மகேஸ்வரி இதுகுறித்து கூறுகையில், சங்கமப்ரியா சிறு குழந்தையாக இருந்தே வலது கை 40% குறைபாடு உடன் இருந்து வருகின்றார். வேகமாக தேர்வு எழுத முடியாது என்பதால் மாவட்ட கலெக்டர் கூட்டத்திலேயே தெரிவித்து தனி அதிகாரிகளை வைத்து அவர் தேர்வு எழுதுவதை கண்காணிக்க ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டேன். அவருக்கு தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் அவகாசம் உண்டு.
டார்ச்சர் கொடுப்பதாக புகார்
இந்த நிலையில், எனது மகளை கலெக்டர் தேவையில்லாமல் விசாரணை செய்ய அழைத்து துன்புறுத்தல் செய்து வருகிறார் என்று மகேஸ்வர் கூறினார். இது குறித்த பின்னணி காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வி அதிகாரிகள் சிலர் இதுகுறித்து கூறியபோது, "கல்வித்துறையில் ஆண்டுதோறும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி என்று ஒரு நிதி ஒதுக்குவார்கள்., இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்திற்கு 64 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.
நிதி மோசடியா?
இந்த நிதியை பயன்படுத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு வகுப்புகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்க வேண்டும். ஆனால் மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் தர்மபுரியில் உள்ள ஒரு சில போட்டோ வீடியோ ஸ்டூயோ கடை உரிமையார்கள் மூலம் தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது போன்று போலியாக பதிவு செய்து 20 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுக்க சொல்லி மகேஸ்வரியை வற்புறுத்தியுள்ளார். இந்த முறைகேடுக்கு மகேஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அவரது மகளை டார்ச்சர் செய்துள்ளார்கள் என்கிறார்கள்.