நெல்லையில் கடைசி தேர்வு எழுத கத்தியுடன் வந்த 10ம் வகுப்பு மாணவர்கள்
நெல்லை: நெல்லையில் 10ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு கத்தியுடன் வந்த மாணவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகதத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு நடந்தது. தேர்வு எழுதி முடித்துவிட்ட உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது தேவையில்லாத மோதல் ஏற்படும் என்பதால் நெல்லையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஏற்கனவே நெல்லை, பாளையில் சில பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வு எழுத வந்த சில மாணவர்கள் கத்தியுடன் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அந்த பள்ளிக்கு சென்று மாணவர்களின் பைகளை சோதனை போட்டனர். அதில் இரண்டு மாணவர்களின் பைகளில் இருந்து தலா 4 கத்திகள் எடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பைகளை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கத்தியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த மாணவர்களையும் போலீசார் எச்சரித்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.