ஐஏஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வருவேன்: சொல்கிறார் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்த டெய்லர் மகள்
பொள்ளாச்சி: தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ள மாணவி ஜனனி அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் பொள்ளாச்சி அருகே இருக்கும் கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என். ஜனனி 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவர் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் 100க்கு 99 மதிப்பெண்களும், மீதமுள்ள கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
இது குறித்து ஜனனி கூறுகையில்,
நான் இந்த சாதனை படைக்க என் பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை தான் காரணம். என் தந்தை நாராயணசாமி டெய்லராக உள்ளார். பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது.
ப்ளஸ் 1 வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுக்க உள்ளேன். ஐஏஎஸ் படித்து கலெக்டராக வேண்டும். அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்றார்.