ஜன.11ல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.
சென்னை: பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 11.1.2015 அன்று நடைபெற உள்ள காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வார்டு 6: நவரத்தன் (மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்).
வார்டு 2: தேன்ராஜா (கண்டோன்மெண்ட் செயலாளர்).
வார்டு 5: ஆனந்தகுமார் (5-வது வார்டு செயலாளர்).
வார்டு 1: ஜெயந்தி மாலா.
வார்டு 3: குணா (எ) குண சேகரன்.
வார்டு 4: லாவண்யா.
அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 வார்டுகள்
பரங்கிமலை- பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதிகளில் 7 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதன் பதவி காலம் 2013, ஜூன் 30 வரை இருந்தது. இதனை அடுத்து கன்டோன்மென்ட் போர்டு மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி காலத்தை நீடித்தது. அதுவும் கடந்த ஜூலையுடன் முடிவடைந்ததால் கன்டோன்மென்ட் போர்டு கலைக்கப்பட்டது. ராணுவ உயர் அதிகாரி மற்றும் கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்து வந்தது.இதற்கு வரும் ஜனவரி 11ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தேர்தல் எப்போது?
இதற்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆலந்தூர் தாசில்தார் அருளானந்தம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அருளானந்தம் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். பின்னர் தேர்தல் பணிகள் குறித்து கண்டோன்மெண்ட் போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.வாக்காளர் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் நடக்கிறது. அவற்றையும் கேட்டு அறிந்தார். வருகிற 9ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அரசியல் கட்சிகள் ஆலோசனை
கண்டோன்மெண்ட் போர்டில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்டாலும் அனைவருக்கும் சுயேச்சை சின்னமே ஒதுக்கப்படும். தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க, தி.மு.க, பாஜக, காங்கிரஸ், ம.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது.