தேர்வு எழுத வந்த ப்ளஸ்2 மாணவருக்கு கத்திக்குத்து.. சகமாணவர்கள் வெறிச்செயலால் விரல்கள் துண்டானது
மதுரை அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது.
Recommended Video
மதுரை: மேலூர் அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது.
அண்மைக் காலமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் வெறித்தனமான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் கத்தி கலாச்சாரம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மேலூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் மாயக்காளை- தீபா தம்பதி. இவர்களின் மகன் அர்ஜுன்.
மாணவர் அர்ஜுன்
மதுரை அருகே உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வருகின்றார். இன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றதை முன்னிட்டு அர்ஜுன் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார்.
அர்ஜுனுக்கு கத்திக்குத்து
அர்ஜுன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜூனிடம் தகராறு செய்தனர். எதிர்பாராத விதமாக அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை சரமாரியாக குத்தினர்.
துண்டான விரல்கள்
கத்திக்குத்தில் இருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள முயன்ற அர்ஜுனின் கைவிரல்கள் துண்டானது. மேலும் அர்ஜூனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சை
இதில் ரத்த வெள்ளத்தில் அர்ஜுன் கீழே சாய்ந்ததை பார்த்த கார்த்திக் ராஜா மற்றும் சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜூனை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெரும் பரபரப்பு
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அர்ஜூன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கத்தியால் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலைவீச்சு
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கத்திக்குத்து சம்பவத்திற்கு என்ன காரணம்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோரை மேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.