ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை.. ஸ்டாலின் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மால் பஸ்கள் எனப்படும் சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வராக பதவி ஏற்ற பின்னர், அவரது கட்சியின் இரட்டை இலை சின்னத்தை விளம்பரப்படுத்துவதற்காக அரசு பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது.
மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் நுழைவு வாயிலில் இரட்டை இலை சின்னம் மிகப்பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவசர அவசரமாக இந்த நுழைவு வாயில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிற்கு, இதுவரை தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களிலும் இரட்டை இலை பொறிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சென்னை மற்றும் புறநகரில் 50 சிறிய பேருந்துகளின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இந்த பேருந்துகளிலும் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. அதாவது அறிவியல் ரீதியாக, இரண்டு அடுக்கு இரட்டை இலை சின்னம் சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்தும் விதமாக, அரசு எந்திரங்களை முதல்வர் ஜெயலலிதா தவறாக பயன்படுத்தி வருகிறார். இதை கண்டு தமிழக மக்கள் மட்டுமல்லாமல், குறிப்பாக எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இரட்டை இலை சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக, தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அடுத்த சில வாரங்களில் 610 புது சிறிய பேருந்துகளை இயக்குவதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்கு சொந்தமான இந்த பேருந்துகளில், இதுபோன்ற சின்னங்கள் வரைவது, கம்பெனி சட்டத்துக்கு எதிரானது.
இது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், இது தொடர்பாக கிரிமினல் வழக்கும் எங்களால் தொடர முடியும். தற்போது ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசின் இந்த செயல் தேர்தல் நடத்தை விதிக்கு எதிராக உள்ளது.
எனவே, சிறிய பேருந்துகளில் ஆளும் கட்சி சின்னமான இரட்டை இலை அல்லது இரண்டு அடுக்கு இரட்டை இலை சின்னத்தை பொறிக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்காடு இடைத்தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், அரசு இயக்கும் பேருந்துகளில் கட்சி சின்னம் வரைவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றமாகும்.
எனவே, முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட 50 சிறிய பேருந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை நீக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகவிருப்பதால் விசாரணையை தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதிகள் நாளைக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.