3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக வென்றாலும் எதிர்க்காலத்தில் தோல்வியையே அதிமுக தழுவும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக தற்போது வென்றாலும் வரும் காலங்களில் தோல்வியை தழுவும் என்று தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. அதில், ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த ரங்கசாமி, செந்தில் பாலாஜியும், ஏ.கே. போஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், 2011ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்ற செல்லாது என்பது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் மு.க. ஸ்டாலின் நேரில் நேரில் ஆஜராகி வெளியே வந்த போது செய்தியாளர் இந்த 3 தொகுதி வெற்றி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பதில்:
மக்கள் அளிக்கும் தீர்ப்பிற்கு தலை வணங்குவதே திமுகவின் வழக்கம். அதனால் மக்களின் தீர்ப்பை திமுக ஏற்கிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் இந்த 3 தொகுதிகளிலும் நடைபெற்ற பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வில்லை. ஆளும்கட்சியின் அராஜகம், அமைச்சர்கள் முறைகேடு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும் வரும் காலங்களில் அது தோல்வியை தழுவும்.
அதிமுகவின் இவ்வளவு அராஜகங்களையும் தாண்டி திமுக அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளது. தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியை தொடர்ந்து திமுக ஆற்றும். அதன் ஜனநாயகப் பணிகள் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.