இறைச்சிக்காக மாடு விற்க தடையா.. சென்னையில் திமுக போராட்டம்.. ஆவேசம் காட்டிய ஸ்டாலின்!
மோடியின் 3 ஆண்டு கால ஆட்சியில் சாதனை என்று ஒன்றும் இல்லை. எல்லாம் வேதனைதான் என்ற மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழகம் மெளனம் காத்து வருகிறது. மேலும், இந்த சட்டத்தை படித்துப் பார்த்து பதில் சொல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பேசியதாவது:
வெறிச்சோடிய மாட்டுச் சந்தை
நாடு முழுவதும் மாட்டுச் சந்தைகள் வெறிச்சோடி கிடக்கிறது. கடுமையான வறட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படிபட்ட நேரத்தில் இந்தக் கொடுமையான சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
3 ஆண்டு கால வேதனை
மோடியின் 3 ஆண்டு கால ஆட்சியில் சாதனை என்று ஒன்றுமில்லை. எல்லாமே வேதனையாகத்தான் இருக்கிறது. மத்திய அரசு கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறியது. 15 லட்சம் ரூபாய் மக்களின் வங்கியில் செலுத்தப்படும் என்று மோடி கூறினார். ஆனால் 15 ரூபாயைக் கூட வங்கியில் செலுத்த வில்லை.
வேலைவாய்ப்பு
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் மோடி. ஒருவருக்காவது வேலை வாங்கி கொடுத்திருக்கிறாரா மோடி என்றால் அதுவும் இல்லை.
மோடி விரும்பியதை சாப்பிட வேண்டுமா?
மோடி விரும்பியதை நாம் உண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசியல் சட்டம் வழங்கிய தனிநபர் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக்கான தடையை மத்திய அரசு போட முடியாது என்றும் அது மாநிலப் பட்டியலில் உள்ளது என்றம் ஹிமாச்சல மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.