வாங்க, மொத்த எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம்.. ஸ்டாலின் அதிரடி
Recommended Video
சென்னை: காவிரிப் பிரச்சினைக்காக அனைத்து எம்.பிக்களும் மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று அதிமுகவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் இதுவரை தமிழகம் வரலாறு காணாத நிதானத்தையும், பொறுமையையும் மட்டுமே கடைப்பிடித்து வந்துள்ளது. எந்த காலகட்டத்திலும், எந்தச் சூழலிலும் அது சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதே இல்லை. ஆனால் மறுபக்கம் கர்நாடகம் முற்றிலும் நேர் மாறாகத்தான் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் இந்த பக்குவம், பொறுமை, நம்பிக்கை எப்போதுமே பலவீனமாக மட்டுமே எதிர்த் தரப்பால் பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் கூட தமிழகத்தை ஒரு தூசு போலவே கருதுகிறது, கர்நாடகத்திற்குக் காட்டும் பரிவு, பாசத்தில் ஒரு சதவீதம் கூட தமிழ்நாட்டின் பக்கம் அது திருப்புவதில்லை.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
இதனால் மக்கள் வேதனையில் வெம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி, மாற்றாந்தாய் மனப்பான்மையில் மட்டும் இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் இந்த முறை ஏதாவது அதிரடியை தமிழகம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏங்கிக் காத்திருக்கின்றனர்.
37 எம்.பிக்கள்
இப்போது தமிழகத்தில் அதிக எம்.பிக்களை வைத்திருப்பது அதிமுகதான். லட்டு போல 37 பேர் உள்ளனர். லோக்சபாவில் 3வது பெரிய கட்சி அதிமுகதான். இதை வைத்து மத்திய அரசுக்கு அதிமுக ஆட்டம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். அதிமுக அரசு அப்படி எந்த அதிரடியும் காட்ட வாய்ப்பில்லை என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் அந்த அதிரடியைக் காட்ட வேண்டும் என்று அதிமுக அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வாங்க விலகலாம் - ஸ்டாலின்
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் எடப்பாடியாரைச் சந்தித்தபோது உங்களிடம் 50 எம்.பிக்கள் உள்ளனர். எங்களிடம் நான்கு பேர் உள்ளனர். தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுத்தால் மொத்தமாக ராஜினாமா செய்வோம் என மத்திய அரசுக்கு நீங்கள் அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார் ஸ்டாலின்.
அதிமுக, திமுக இதைச் செய்ய வேண்டும்
உண்மையில் இதை மட்டும் அதிமுகவும், திமுகவும் செய்தால் ஒட்டுமொத்த தமிழகமும் இந்த இரு கட்சிகளுக்கும் முழு ஆதரவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகம் என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பில் இருப்போருக்கு இது அதிர்ச்சி தரக் கூடியதாக இருக்கும். தமிழகத்தையும் மதிக்க அவர்கள் முன்வரக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படலாம்.
எனவே தமிழக மக்களுக்காக இதை இரு கட்சிகளும் உறுதியோடு செய்யுமா?