'வாக்கிங்'கில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்-வழக்கம் போல செல்பி, டீ..அமர்க்களமான பாளையங்கோட்டை மார்க்கெட்
திருநெல்வேலி: தேர்தல் பிரசாரத்துக்காக நெல்லையில் முகாமிட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கிங் சென்றபடியே பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதனால் பாளையங்கோட்டை மார்க்கெட் அமர்க்களப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தாழையூத்து விருந்தினர் இல்லத்துக்கு நேற்று இரவு மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். வழக்கமாக காலையில் வாக்கிங் செல்லும் ஸ்டாலின் இன்று காலை திடீரென பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிக்கு சென்றார்.
பொதுமக்களுடன் சந்திப்பு
அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் நெல்லை, பாளையங்கோட்டை வேட்பாளர்கள் உள்ளிட்ட சில திமுக நிர்வாகிகள் மட்டுமே சென்றனர்.
திரண்ட பொதுமக்கள்
பாளையங்கோட்டை மார்க்கட்டுக்குள் நுழைந்த ஸ்டாலின் வியாபாரிகள், காய்கறி வாங்க வந்த பொதுமக்களை நலம் விசாரித்துக் கொண்டே மார்க்கெட்டை சுற்றி வந்தார். ஸ்டாலின் வந்ததை அறிந்த பொதுமக்களும், திமுக தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.
குறைகேட்பு
இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. வியாபாரிகளிடம், குறைகள் ஏதும் உள்ளதா? குளிர்சாதன கிட்டங்கி வசதி உள்ளதா? எனக் கேட்டதுடன் அவர்களது ஊர், மனைவி, குழந்தைகள் பற்றியும் விசாரித்தார். சிலர் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்போனில் செல்பி எடுத்தனர். பெண்களும் ஸ்டாலினுடன் ஆர்வமாக பேசினர்.
வழக்கம்போல டீ, வடை
அதன் பின் மார்க்கெட்டின் வெளியே உள்ள ஹோட்டல் முன்பு நின்று டீ குடித்தார். உடன் வந்த திமுகவினருக்கும் காபி, டீ, வடை வாங்கிக் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து தாழையூத்து விருந்தினர் இல்லத்துக்கு ஸ்டாலின் சென்றார். ஸ்டாலினின் திடீர் விசிட்டால் பாளையங்கோட்டை மார்க்கெட் இன்று காலையில் அமர்க்களப்பட்டது.