கரகாட்டம் களைகட்ட பேரன், பேத்திகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்டாலின்
கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் களை கட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமத்துவ பொங்கலை தனது மனைவியுடன் கொண்டாடியுள்ளார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.
காஞ்சிபுரம்: பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போரூர் அருகே உள்ள கோவூர் சவுந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரர் கோவிலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பேரன், பேத்திகளுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்டாலினுக்கு மரியாதை
மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவிக்கு ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் களைகட்டியது.
துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் இணைந்து பொங்கல் பானைகளில் தண்ணீர் ஊற்றி அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை இட்டு, அடுப்பு பற்ற வைத்து பொங்கலிட்டனர்.
கலை நிகழ்ச்சிகள்
தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்ச்சிகளை பேரன், பேத்திகளுடன் உற்சாகமாக கண்டு ரசித்தார் ஸ்டாலின். குழந்தைகள் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு குதூகலமடைந்தனர்.
சமத்துவ பொங்கல்
தி.மு.க.வினர் மட்டும் அல்லாமல் தமிழ் உணர்வுள்ள எல்லோரும் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் நடத்திடவேண்டும் என்றுதான் கருணாநிதி ஆணையிட்டார். அதுமட்டுமல்ல தமிழர் திருநாளாம் பொங்கல் தினம் தான் தமிழ் புத்தாண்டாக இருக்கவேண்டும் என ஆணையிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை மாற்றியுள்ளனர் என்பது வேதனைக்குரியது.
பரிகாரம் காண வேண்டும்
விவசாயிகள் வறட்சியால் பெருமளவில் தற்கொலை செய்திருப்பதை நம்மால் நினைத்து பார்க்காமல் இருக்கமுடியவில்லை. நமது வருத்தங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டிருந்தாலும் மாநிலத்தில் உள்ள ஆட்சி இதை தடுத்திட வேண்டும், நிறுத்தியாக வேண்டும் நல்ல பரிகாரத்தை காண வேண்டும் என்றார் ஸ்டாலின்