ஸ்டாலின் காணும் கனவு... கனவாகவே போகும் - வேல் யாத்திரையில் பேசிய எல். முருகன்
கொரோனா காலத்தில் களத்திற்கு வராத திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஒரு கனவு கண்டு வருகிறார். அவரது கனவு கனவாகவே போகும் என்று பாஜகவின் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பழனி: கந்தசஷ்டி கவசத்தையும், இந்துமதக் கடவுள்களையும் நிந்திக்கும் கருப்பர் கூட்டத்தையும், அவர்களுக்கு உறுதைணையாக இருந்த கயவர் கூட்டத்தையும் தமிழகத்தின் காவிக்கூட்டம்தான் விரட்டும் என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் காணும் கனவு வெறும் கனவாகவே போகும் என்றும் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வெற்றிவேல் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத்தலைவர் முருகன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் மற்றும் கயவர் கூட்டத்திற்கு பாடம் கற்பிக்கவும், உலகிற்கே வழிகாட்டியாக உள்ள பிரதமர் மோடியின் திட்டத்தை மக்களுக்கு தெரிவிக்கவும், கொரோனா காலத்தில் முன்களத்தில் இருந்து பணியாற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுமே இந்த யாத்திரை என்று கூறினார்.
கொரோனா காலத்தில் களத்திற்கு வராத திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஒரு கனவு கண்டு வருகிறார். அவரது கனவு கனவாகவே போகும் . கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருந்தது திமுக என்றும், அவர்களுக்கு சட்டரீதியான உதவி செய்து வருவது திமுகவும் அதன் கூட்டணிகட்சிகள்தான் என்றும் குற்றம் சாட்டினார்.
எந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் அதிமுக ஆட்சியில் நடக்குது - துரைமுருகன்
விடியலை நோக்கி
கருப்பர்கூட்டத்தையும் கயவர் கூட்டத்தையும் காவிக்கூட்டம்தான் விரட்டும் என்றும், 2011ம் ஆண்டுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல் தவிக்கவைத்த திமுகவினர்தான் இன்று விடியலை நோக்கி என்று கிளம்பியுள்ளனர் என்று கூறிய முருகன், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இருட்டே ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
பூங்கோதை
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசும் கனிமொழி இன்று திமுகவின் முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்எல்ஏ பூங்கோதை திமுகவினரின் காலில் விழும்போது எங்கு சென்றார் என்றும் கேள்வி எழுப்பினார்.
2 ஜி வழக்கு
ஊழலையும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் பிரிக்க முடியாது என்றும், அகராதியில் திமுக என்றாலே ஊழல் என்றுதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். 2ஜி வழக்கு தினமும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவதை மக்களிடம் மறைப்பதற்காகவே தினந்தோறும் ஏதாவது ஒன்றை பேசி திமுக திசைதிருப்புவதாகவும் கூறினார்.
விவசாயிகள் நம்பவில்லை
விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து காப்பதற்காக பிரதமர் மோடி கொண்டு வந்த வேளாண்சட்டத்தை திமுக திசை திருப்ப முயற்சித்ததை தமிழக விவசாயிகள் யாரும் நம்பவில்லை என்றும், விவசாயிகள் மனதார வேளாண்சட்டத்தை ஆதரித்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார் முருகன்.
மோடி சாதனை
கந்தசஷ்டி கவசத்தையும், இந்துமதக் கடவுள்களையும் நிந்திக்கும் கருப்பர் கூட்டத்தையும், அவர்களுக்கு உறுதைணையாக இருந்த கயவர் கூட்டத்தையும் தமிழகத்தின் காவிக்கூட்டம்தான் விரட்டும் என்றும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் ஒருகோடி பெண்களுக்கு மூன்று மாதத்திற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கியது, இலவச எரிவாயு வழங்கியது, இலவச கழிப்பறை கட்டிக்கொடுத்தது பாரதபிரதமர் மோடியின் சாதனை என்றும் கூறினார் முருகன்.
பழனி தனி மாவட்டம்
ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்மஸ், ரம்ஜான் மற்றும் பக்ரித் விழாக்களுக்கு விடுமுறை அளிப்பது போல தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என்றும், பழனியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்போவதாக தெரிவித்தார். பழனி வழியாக அதிக ரயில்களை விடவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைக்கப்போவதாக தெரிவித்தார் எல்.முருகன்.