பெண்ணை தாக்கிய கூடுதல் டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுக்கடையை குடியிருப்பு பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்ணை தாக்கிய டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் சாமளாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலை 8 மணி முதல் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 9 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து அங்கு வந்த அதிகாரிகள் டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதியளித்தனர்.
அதிகாரிகள் உறுதியளித்தப் பின்னரும் பொதுமக்கள் கலையாமல் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் ஓடி ஓடி அடித்தனர். இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் டிஎஸ்பி ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். போராட்டத்தில் பெண்ணை தாக்கிய டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
புதிய மதுக்கடைகளை திறப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ள மு.க. ஸ்டாலின் காட்டுமிராண்டி சமூகத்தில் வாழ்கிறோமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என கூறிஉள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.