மதுரை மாணவிகள் மீது ஆசிட் ஊற்றியவனை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை: மதுரையில் இளம் மாணவிகள் மீது ஆசிட் வீசியவர்களைப் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், மதுரையில் இளம்பெண் மீது நடைபெற்றுள்ள ஆசிட் வீச்சு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட கொடுமையான சம்பவத்தை செய்த குற்றவாளியை காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க ஆவண செய்ய கேட்டு கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிடுகையில்,
ஆசிட் வீச்சு கலாச்சாரம் தொடங்கியதே ஜெயலலிதா ஆட்சியில்தான். ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியால் தமிழகத்தின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதில் அதிமுக அரசு குறியாக உள்ளது என்றார் ஸ்டாலின்.