துப்பாக்கிச் சூடு.. முதல்வர், டிஜிபி, ஐஜி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதியுங்கள்- ஸ்டாலின் கோரிக்கை
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முதல்வர் , காவல் துறை டிஜிபி, உளவுத்துறை ஐஜி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முதல்வர், காவல் துறை டிஜிபி, உளவுத்துறை ஐஜி ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொடிய நோய்கள் பரவுவதற்கும், கடுமையான பாதிப்புகளுக்கும் அடிப்படை காரணமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 99 நாட்களாக ஜனநாயகரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவிமக்கள் மீது, 100-வது நாளன்று திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை ரத்தம் சொட்டச்சொட்டப் பட்டப்பகல் படுகொலை செய்துவிட்டு, அந்தக் கோரப்படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கும் துணிச்சல் இல்லாமல், "துப்பாக்கிச்சூட்டை" வெட்கம் சிறிதுமின்றி, நியாயப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறைத்து கணக்கு
இப்போது துப்பாக்கிச்சூட்டில் 25 முதல் 30 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை வேண்டுமென்றே பல்வேறு காரணங்களுக்காகக் குறைத்துக் காட்டுகிறார்கள் என்றும் அடுத்தடுத்து பத்திரிக்கை செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர்முனையில் எதிரிகளை விரட்டிச் சென்று கொன்று சாய்ப்பதைப் போல், போலீஸார் தூத்துக்குடி பகுதியில் அத்துமீறி வீடு வீடாகப் புகுந்தும், வீதி வீதியாக விரட்டிச் சென்றும் காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களையும், இளைஞர்களையும் வேட்டையாடி, கொல்லப்பட்டவர்களின் உடல்களை, ஏதோ விலங்குகளை இழுத்துச் செல்வதைப்போல, தரதரவென ரோட்டில் இழுத்து வரும் வீடியோ காட்சிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து, தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
துப்பாக்கி பரிமாற்றம்
"டி.ஐ.ஜி.யின் ஸ்டிரைக்கிங் போர்ஸில்", உள்ளவர்கள் சீருடை அணியாமல் போலீஸ் வாகனங்கள் மீது ஏறி நின்று, நீண்ட தூரத்தில் உள்ளவர்களை குறிபார்த்து துப்பாக்கிகளால் சுடும் வீடியோ காட்சிகளும் வெளி வந்துள்ளன. யூனிபார்ம் போடாமல் ஒருவருக்கொருவர் துப்பாக்கியைப் பரிமாறிக் கொள்ளும் காட்சிகளும் வெளிவந்திருக்கின்றன.
குறி வைத்து சுட்டுக் கொலை
தமிழ்நாடு "போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டருக்கு", விரோதமாகவும், "என்கவுன்டர்கள்" குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் வகையிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்நின்று வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். போலீஸாரின் நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் சொல்லும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையானதற்கும் அதிகமான "போர்ஸும்", "துப்பாக்கிகளும்" திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், துப்பாக்கிச் சூட்டை தற்காப்பு நடவடிக்கையையும் தாண்டி முக்கிய போராட்டக்காரர்களைக் குறிவைத்துக் கொல்லும் "ஆப்பரேஷன்" ஆகவும் மாறிவிட்டது.
எள்ளளவும் வாய்ப்பு இல்லை
இதன்மூலம் அமைதிப் பேரணியை முறையாகக் கட்டுப்படுத்துவதை விட, போராட்டத்தை முன்நின்று நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முன் கூட்டியே ஒரு சதித்திட்டமும், அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான நடைமுறையும் உருவாக்கப் பட்டுள்ளது தெளிவாகிறது. பொதுமக்களை எதிரிகளாக நினைத்து வஞ்சம் தீர்த்துக் கொள்ள, இப்படியொரு சதித்திட்டம் அடங்கிய துப்பாக்கிச்சூடு உளவுத்துறை ஐ.ஜி, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தெரியாமலோ, பேரணியைக் கையாண்ட தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், தென்மண்டல ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் ஆகியோருக்கு தெரியாமலோ நடைபெற்றிருக்க எள்ளளவும் வாய்ப்பு இல்லை.
உறுதி செய்யும் விதம்
ஆனால், இவ்வளவு பயங்கரமான - கோரமான துப்பாக்கிச்சூட்டை நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீதோ, யூனிபார்ம் இல்லாமல் நின்று சுட்ட காவல்துறையினர் மீதோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் திரைமறைவில் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரை மாற்றி, சென்னையில் முக்கியப் பதவி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் சந்தேகிக்கும், "சதித் திட்டத்தை" மேலும் உறுதி செய்யும் விதத்தில் இருக்கிறது.
திமுக கண்டனம்
ஆகவே, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் முழு உண்மையான எண்ணிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னணித் தலைவர்களைக் குறிபார்த்துச் சுட்டுக்கொன்றது பற்றி விசாரித்து, குறிப்பாக ஓர் இளம்பெண்ணை வாயில் சுட்டுக்கொன்ற இதயமில்லாத காவல்துறையினரை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீதும், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. திரு. டி.கே ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. திரு. சத்தியமூர்த்தி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், மதுரை மண்டல ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால் ஆகியோர் மீதும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு உடந்தையாக இருந்து ஒப்புதல் அளித்துக் கூட்டுச்சதி செய்த முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, நியாயமாக விசாரணை நடத்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
வட்டிப்பணம்
அப்படி உடனடியாக முதலமைச்சர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல்செய்து, உரிய விசாரணை நடத்தவில்லையென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதவிர, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதற்கு அபராதமாக உச்சநீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் மற்றும் அதன் மீதான வட்டிப்பணம் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
அந்த நிதியிலிருந்து தனியார் ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியுள்ள 13 பேர் குடும்பத்திற்கும் முதலில் தலா ஒரு கோடி ரூபாயும், ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களுக்கும், சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் தேவையான நிதியுதவியும் அளிக்க, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அவசரக்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.