ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வராவிட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க பிரதமர் மோடி அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக, காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று அதிமுகவினர், பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். நீங்கள் ஏன் தடையை நீக்க முயற்சி செய்யவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், அதற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உட்பட பல முக்கிய திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வீண் பழி சுமத்துவதா?
ஜல்லிக்கட்டு தடைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான் காரணம் என்று அபாண்டமாக பழி கூறுகின்றனர். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதியின் முயற்சியினால் நடைபெற்றது என்றார் ஸ்டாலின்.
நீங்க நடத்தியிருக்கலாமே?
ஜல்லிக்கட்டு தடைக்கு நாங்கள்தான் காரணம் என்றால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தடையை நீக்கியிருக்கலாமே? தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாமே? 50 அதிமுக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்றும் ஸ்டாலின் கேட்டார்.
நடிகைகளை சந்திக்கிறார்
பிரதமர் மோடி திரை நட்சத்திரங்களை தனி தனியாக சந்திக்கிறார். நடிகை கவுதமி, கஜோல், கரீனா கபூர், ரஜினிகாந்த், சல்மான்கான், அமீர்கான்
சினிமா நட்சத்திரங்களை சந்திக்கும் மோடி தமிழக எம்.பிக்களை சந்திக்க நேரம் ஒதுக்காதது ஏன்? தனித்தனியாக நடிகர்களை சந்திக்கும் மோடி 50 எம்.பிக்களை சந்திக்க மறுத்து விட்டார்.
தவிர்க்கும் மோடி
காவேரி பிரச்சினைக்காக மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கவில்லை. தமிழக பிரச்சினைகள் பற்றி பேச மோடி மறுக்கிறார். விலங்குகள் நல வாரியத்தை டிஸ்மிஸ் செய்யவேண்டும். புதிய குழு அமைக்கும் போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். திட்டக்கமிஷனையே கலைத்தவர்கள் இதை செய்ய முடியாதா?
|
விலங்குகள் நல வாரியம்
ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் சொல்வது ஏன்? இதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்ன பதில் சொல்லப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
|
அவசர சட்டம்
தமிழ் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும், மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும், மாநில அரசு அதை வலியுறுத்திட வேண்டும். அவசர சட்டம் மத்திய அரசுக்கு புதிதல்ல. 652 அவசர சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 58 அவசர சட்டம் போடப்பட்டுள்ளது. மோடி பிரதமரான பின்னர் 28 அவசர சட்டம் கொண்டு வந்தனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரக்கூடாதா என்றும் ஸ்டாலின் கேட்டார்.
மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க பிரதமர் மோடி அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் தமிழக அரசையும், மத்திய அரசையும் மக்கள் மன்னிக்க மாட்டார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.