ஸ்டாலின், தினகரன் கூட்டுச் சதியே எங்களது தோல்விக்குக் காரணம்- முதல்வர் பரபர புகார்
ஸ்டாலின் மற்றும் தினகரனின் கூட்டுசதியே அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் மக்களை மாயாஜாலம் மற்றும் தில்லுமுல்லு செய்து தினகரன் வெற்றிபெற்றுள்ளதால் இதுமுறையான வெற்றியல்ல, மேலும் இது அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று அக்கட்சியின் உயர்மட்டக்குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பலரை நீக்கி முடிவெடுக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஈபிஎஸும், துணை முதல்வர் ஓபிஎஸும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதல்வர், ஸ்டாலினும், தினகரனும் சதிதிட்டம் தீட்டி இரட்டை இலையை வீழ்த்தியுள்ளனர். இதனால் அதிமுக தோல்வியடைந்து விடாது. உடனிருந்தே அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்தும் தில்லுமுல்லு செய்தும் வாக்குகளை தினகரன் பெற்று விட்டார்.
அரசு இயந்திரம் முறையாக செயல்படாததே இந்த தோல்வியை காட்டுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், திமுக டெபாசிட் இழந்து விட்டதால் அந்த கட்சியே இல்லை என்று சொல்லி விடமுடியாமா, அதைப்போல தேர்தல் தோல்விக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை தன்மானமுள்ள அதிமுக தொண்டன் யாரும் வெளியிட்டிருக்க மாட்டான்.
மேலும் பேசிய அவர், எடப்பாடியில் பலமுறை தோல்வியடைந்திருக்கிறேன், வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதனால் தோல்வி என்பது பெரிய விஷயமில்லை, அதிமுக தோல்விவியடைந்ததாகவும் நினைக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தல் தில்லுமுல்லு குறித்து அனைத்து ஊடகங்களுக்கும், மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.