3 தொகுதி தேர்தல்... மதுரை, தஞ்சை, கரூர் மா.செக்களுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் மற்றும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தல் தொடர்பாக 3 மாவட்ட திமுக செயலாளர்களுடன், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலையும், காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேரத்ல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. 3 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக, திமுக தயாராகி வருகின்றன. மற்ற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன.
பொதுத் தேர்தலின்போது அரவக்குறிச்சியில் திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும், தஞ்சாவூர் தொகுதியில் அஞ்சுகம் பூபதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளராக மு. மணி்மாறன் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அங்கு அதிமுகவின் சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால் மரணமடைந்ததால் அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு தொடர்பாக 3 மாவட்டச் செயலாளர்களும் இன்று சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி. பழனிச்சாமி போட்டியிட விரும்பாததால் வேறு வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் வேட்பாளர்களும் இன்றே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. தஞ்சை, திருப்பரங்குன்றம் வேட்பாளர்கள் குறித்துத் தெரியவில்லை.