சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வலுக்கட்டாயமாக ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார்.
சென்னை: அவைக்கு குந்தகம் விளைவித்தாக கூறி திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர் தடுத்தனர். ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். மேஜை, நாற்காலிகள் உடைந்தன. சபாநாயகர் தள்ளுமுள்ளுவிற்கு உள்ளானார். இதனையடுத்து அவை 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடிய உடன் தனபால் தனக்கு நேர்ந்த துன்பத்தைக்கூறி வேதனையுடன் பேசினார். திமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபடவே அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டசபையை 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். இரண்டாவது முறையாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 20 எம்எல்ஏக்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர். ஆனால் அவையில் இருந்து வெளியேற மறுத்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஸ்டாலினை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.