கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது... ஸ்டாலின்
கருணாநிதியை மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.
கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மோடியின் வருகை அரசியல் நிகழ்ச்சியல்ல, ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்றார். அவரது வருகை முதல்நாள் இரவில்தான் தனக்கு தெரியவரும் என்றும் கூறினார்.
வயது மூப்பின் காரணமாக ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்க விரும்புவதாகவும், அப்போது சென்னையில் நான் இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகவும், அவரது அலுவலகத்தில் இருந்து திடீர் தகவல் கிடைத்தது. துபாயில் இருந்து உடனடியாக கிளம்பி சென்னை வந்ததாக தெரிவித்தார்.
கோபாலபுரம் வீட்டிற்கு வந்த மோடியை மனிதாபிமான அடிப்படையில் சந்தித்து வரவேற்றேன். அவரைப் பார்த்து வணக்கம் சார் என்றேன். அவரும் வணக்கம் சார் என்றார். அவ்வளவுதான் நடந்தது. இதில் அரசியல் ஏதுமில்லை.
கருணாநிதியைப் பார்த்து, இங்கிருந்தால் உங்களால் ஓய்வெடுக்க முடியாது, டெல்லிக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியை அரசியலாக்கி திரித்து எழுதுபவர்களின் கனவு பலிக்காது. மோடி எங்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கவில்லை. மோடியை வைத்து நாங்களும் அரசியல் செய்ய நினைக்கவில்லை என்றும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.