காவிரி மீட்பு நடைபயணம்... கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து அவரிடம் போராட்டம் பற்றி எடுத்துக்கூறி வாழ்த்துகளைப் பெற்றார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாலை மறியல், ரயில் மறியல், உண்ணா விரதம், முழு அடைப்பு என்று பல விதங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்திற்காக திருச்சி புறப்படும் முன்னர் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்தார். உரிமை மீட்புப் பயணம் குறித்த விவரங்களை கருணாநிதியிடம் எடுத்துக்கூறிய ஸ்டாலின் அவரிடம் வாழ்த்துகளையும் பெற்றார்.