ஜல்லிக்கட்டு.. சசிகலா குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் 'கவனமாக' பதில்!
ஜல்லிக்கட்டு பற்றிய, தனது பேட்டியில் சசிகலாவை எதிர்த்தோ, விமர்சனம் செய்தோ ஒரு வார்த்தையை கூட ஸ்டாலின் பேசவில்லை. அந்த பெயரை தவிர்த்துவிட்டார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்த, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலினிடம், ஜல்லிக்கட்டு குறித்து நீங்கள் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்டாலின், "
ஜல்லிக்கட்டு பற்றி இப்போது கூட முதல்வர் பன்னீர் செல்வத்திடம் பேசினேன். திமுக ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு நடந்தது. உச்சநீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றினால் ஜல்லிக்கட்டை நடத்திவிடலாம், என்பதற்காக அவசர சட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.
அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடந்தது என்பது 100 சதவீதம் உண்மை. இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அதிமுக ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் வரைமுறையை பின்பற்றவில்லை. எனவேதான், ஜல்லிக்கட்டுக்கு தடை போடும் சூழல் வந்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்குமாறு, முதல்வரிடம் எடுத்துச் சொல்லியுள்ளோம்" என்றார் ஸ்டாலின்.
ஆனால் தனது பேட்டியில் சசிகலாவை எதிர்த்தோ, விமர்சனம் செய்தோ ஒரு வார்த்தையை கூட ஸ்டாலின் பேசவில்லை. அந்த பெயரை தவிர்த்துவிட்டார்.
முன்னதாக, இன்று காலையில் அளித்த ஒரு பேட்டியின்போது கூட, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தமிழக ஆட்சி சிறப்பாக நடக்கிறதா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஸ்டாலின், நீங்கள் என்ன நோக்கத்தில் கேட்கிறீர்கள் என தெரியும்.. அதற்கு நான் பலிகடா ஆக முடியாது என கூறிவிட்டார்.