தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்க்கு நேரில் வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. இதனையடுத்து நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்வராக பதவியேற்றார். அது முதல் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பினாமி முதல்வர் என்றும், பொம்மை முதல்வர் என்றும் கடுமையாக சாடி வந்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையை கூட்டவேண்டும் என்றும் எப்போது கூட்டுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டார்.
அதற்கு முதல்வர் ஓ.பி.எஸ் பதில் அறிக்கை விடுவதும் இதற்கு கருணாநிதியும், ஸ்டாலினும் கண்டனம் தெரிவிப்பதுமாக நவம்பர் மாதம் கடந்தது.
ஒருவழியாக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று வந்தார்.
முதல் வேலையாக நேரடியாக முதல்வரை சென்று சந்தித்து வாழ்த்து கூறினார் ஸ்டாலின். சட்டப்பேரவை வளாகத்தில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.