சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்
சேலம்: காந்தியவாதி சசிபெருமாளின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதி உதவியை சசிபெருமாளின் மனைவியிடம் ஸ்டாலின் வழங்கினார்.
சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகில் உள்ள இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள்,59. இவர் கடந்த 31ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக்கடையை மூடக்கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சசிபெருமாள் இறந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்தனர். சசிபெருமாளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் சேலத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர்.
சசிபெருமாளின் கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றவில்லை என்றாலும், சேலம் மற்றும் மாவட்டம் முழுவதுமாவது மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிபெருமாளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் சசிபெருமாளின் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம், உடலை வாங்கி வந்து இறுதி சடங்கு செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். அவரது கோரிக்கைகள் நிறைவேற தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தனர்.
இதை ஏற்று 7 நாட்களுக்கு பின்னர் சசி பெருமாளின் உடலை வாங்கிக் கொண்ட உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு சேலம் புறப்பட்டனர். சசிபெருமாள் உடல் சரியாக இன்று மதியம் 12.15 மணியளவில், அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காடு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது வைக்கப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி
சசிபெருமாளின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கமியூனிஸ்டு மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டாலின் அஞ்சலி
சசிபெருமாள் உடலுக்கு தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சசிபெருமாள் மனைவி மகிளம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
போராட்டத்தில் மரணம்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சசிபெருமாள் தொடர்ந்து போராடி வந்தார். கடந்த 31ம்தேதி சசிபெருமாள் கன்னியாகுமரிக்கு சென்று, மதுக்கடைகளை மூடவலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். இதில் அவர் இறந்தார்.
8 நாட்களாக போராட்டம்
அதிகாரிகளும், போலீசாரும் சசிபெருமாளை தடுத்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சசிபெருமாள் இறந்துள்ளார். அவரது உடல் 8 நாட்களுக்கு பிறகு, இன்று எடுத்து வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்படுகிறது.
திமுக இரங்கல்
பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று, பல்வேறு கட்ட போராட்டங்களில் சசிபெருமாள் ஈடுபட்டார். என்தற்காகவே அவர் உயிரையும் இழந்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தி.மு.க.சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ரூ.10 லட்சம் நிதி உதவி
சசி பெருமாள் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி சசி பெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவியை அவரது மனைவியிடம் வழங்கினார்.