முதல்வரின் பதில் நிராகரிக்கப்படுமா? எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட வழக்கில் ஸ்டாலின் பதில் மனு!
எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சசிகலா தரப்பு தங்களின் சார்பிலான அரசு அமைய வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் தங்கமும் அளித்ததாக கடந்த 12ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ வீடியோவில் பேசுவது தன்னுடைய குரல் அல்ல என மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து எம்எல்ஏக்கள் அதிமுக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கோடிக்கணக்கில் பணபேரம் நடந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முதல்வரின் பதில்
மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து திமுக தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தார்.
சிபிஐ விசாரிக்க முடியாது
அதில், தமிழக சட்டசபையில் நடைபெற்ற விவகாரத்தினை சிபிஐ விசாரிக்க முடியாது என்று கூறியிருந்தார். அதேபோல், சட்டபை செயலாளர் தரப்பிலும் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவகாசம் கேட்ட திமுக
இதனையடுத்து முதல்வர் அளித்த பதிலுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்று திமுக சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் கொண்ட அமர்வு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
ஸ்டாலின் பதில் மனு
இந்நிலையில் இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ-க்களை விலை பேச தங்கம் மற்றும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சிபிஐ விசாரித்தால் மட்டுமே
எம்.எல்.ஏ சரவணன் அளித்துள்ள வீடியோ பேட்டியில் பணம் கொடுத்துள்ளது உறுதியாகியுள்ளது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக பண பேர வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.