அதிமுக எம்பிக்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக எம்பிக்களைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : அதிமுக எம்பிக்களைப் பற்றி விமர்சிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வேலைக்குச் செல்லும் ஏழை பெண்களுக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா கோவில்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 100 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமேடையில் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்தினை கேட்டுள்ளார்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததாக கூறுவது தவறான தகவல். அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து அ.தி.மு.க. 1998-ல் விலகியது. ஆனால், அதுகுறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
14 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க. காவிரி பிரச்சினையை கருத்தில் கொண்டு அப்போது திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினமா செய்திருக்களாமே, ஏன் செய்யவில்லை.
அப்போது அது பற்றி எந்தவித கருத்தும் கூடத் தெரிவிக்கவில்லை. இப்போது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து பேசுவதற்கு தகுதியும், உரிமையும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.