ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
Recommended Video
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வாசலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று முன் தினம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தலைமை தாங்கிப்பேசினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார்.
அப்போது ஸ்டாலின் சென்ற கார் ஸ்ரீரங்கம் கோவிலின் ரெங்கா, ரெங்கா கோபுரம் முன்பு நிறுத்தப்பட்டது. அங்கு காரில் இருந்து இறங்கிய ஸ்டாலினுக்கு அர்ச்சகர்கள் சால்வை அணிவித்து நெற்றியில் பொட்டு வைத்து வரவேற்றனர். பின்பு யானை மாலையிட்டு ஆசிர்வாதம் வழங்க, ஸ்டாலின் யானைக்கு கரும்புத்துண்டுகள், வெல்லக்கட்டியை வழங்கினார்.
அதன் பின் அங்கிருந்து கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம் அருகில் வந்த ஸ்டாலினுக்கு பிராமணர் சங்கம் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அடுத்தமுறை ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண சட்டசபையில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.