மேலாண்மை வாரியம் அமையாவிடில் அரசு கிளர்ந்தெழும் என நம்புகிறேன்... ஸ்டாலின் செம பாயிண்ட்!
காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிடில் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்பட மாட்டாது என்றும், அப்படி அமையாத பட்சத்தில் அதிமுக எம்பிகள், எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று நம்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மண்டல மாநாட்டை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாரை தப்படைகள் மேளம் முழங்க ஈரோடு மாநாட்டை வெற்றி மாநாடாக்கியதற்காக சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. மேள தாள வரவேற்புகளால் சென்னை விமான நிலையமே அதிர்ந்தது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : திமுக தான் நிச்சயம் அடுத்தது ஆட்சிக்கு வரும். அரசியல் விமர்சகர்களும், ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்களும் தமிழகத்தில் வெற்றிடம் வந்துவிட்டதாக தொடர்ந்து சொல்லி வருவதை நாம் பார்க்கிறோம்.
ஈரோடு மண்டல மாநாட்டை பார்த்தபிறகாவது வெற்றிடம் என்று சொல்லிக்கொள்வதை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா என்று மார்ச் 29 வரை பொருத்திருந்து பார்க்கலாம் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.
ஓபிஎஸ்ஸே இப்படி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். நிச்சயமாக நான் சொல்கிறேன், 29ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடப் போவதில்லை. எனவே குதிரை பேர ஆட்சி நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அரசு உடனே மத்திய அரசை எதிர்த்து கிளர்ந்து எழும் என்று எதிர்பார்க்கிறேன். அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிகள் உடனடியாக மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று நம்புவதாக ஸ்டாலின் கூறினார்.