தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியில் அமர்ந்துவிட நினைக்கிறார் ஸ்டாலின்: தமிழிசை
தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியில் அமர்ந்துவிட ஸ்டாலின் நினைக்கிறார் என்று தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி : காவிரி விவகாரத்தை வைத்து தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஸ்டாலின் ஆட்சியில் அமர நினைக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் காவிரி விவகாரத்தை வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யப்பார்க்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டால் அதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியில் அமர ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அது நிச்சயம் நடக்காது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தேவையில்லாமல் பாஜக அரசைக் குற்றம்சாட்டுகிறார்கள். உண்மையில், காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்தது திமுகவும், காங்கிரஸும் தான். சொல்லப்போனால் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.