காவேரி மருத்துவமனையிலிருந்து ஸ்டாலின், தலைவர்கள் புறப்பட்டு சென்றனர்
மருத்துவமனையிலிருந்து ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
Recommended Video
சென்னை: 10 மணி அளவில் மற்றொரு அறிக்கை வெளியாகும் என தகவல்கள் கசிந்த நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து அவரது குடும்பத்தார்கள் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். திமுக எம்எல்ஏக்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு கிளம்பி வந்தனர். அதேபோல, பல்வேறு ஊர்களிலிருந்து தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
மற்றொரு அறிக்கை?
இந்நிலையில் இன்று இரவு 10 மணி அளவில் கருணாநிதி உடல்நலம் குறித்த அறிக்கை ஒன்று மருத்துவமனை தரப்பில் வெளியாக இருந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் நாளை காலை 6 மணி அளவிலாவது அறிக்கை வரும் எனவும் கூறப்பட்டது. இதனால் மேலும் மருத்துவமனையில் தொண்டர்கள் வருகை அதிகமாகி, போலீசார்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
ஸ்டாலின் புறப்பட்டார்
எந்நேரமும் மருத்துவமனை தரப்பின் அறிக்கை வந்துவிடுமோ என்று தொண்டர்கள் தரப்பில் அச்சம் அடைந்தனர். ஆனால் இந்த அச்சத்தை தவிர்க்கும் வகையில், காவிரி மருத்துவமனையிலிருந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையை விட்டு கிளம்பி சென்றார். அவரை தொடர்ந்து கனிமொழியும் புறப்பட்டார்.
பதட்டம் தணிகிறது
அதேபோல முக்கிய தலைவர்களான துரைமுருகன், ஆ.ராசா, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் புறப்பட்டு சென்றனர். பின்னர் திமுக எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக மருத்துவமனையை விட்டு கிளம்பினர்.இவ்வாறு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கிளம்பியதால் கருணாநிதி உடல்நிலை குறித்த தொண்டர்களின் பதட்டம் ஓரளவு தணிந்து வருகிறது.
பரபரப்பு குறைகிறது
மருத்துவர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அது குறித்த தீவிர சிகிச்சை அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மருத்துவமனை வாயிலில் பரபரப்பு குறைந்து வருகிறது.