பள்ளிக்கு கட் அடிப்பது போல ஸ்டாலின் சட்டசபையை கட் அடிக்கிறார்: பொன்.ராதாகிருஷ்ணன்
பள்ளி மாணவர்களை போல் ஸ்டாலின் சட்டசபையை கட் அடிக்கிறார் என பொன்.ராதா தெரிவித்துள்ளார்.
தஞ்சை: திமுக அழிந்துவிடும் என திமுகவே நம்புவதாக தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பள்ளி மாணவர்களை போல் ஸ்டாலின் சட்டசபையை கட் அடிப்பதாக கூறியுள்ளார்.
தஞ்சையில் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியபோது கூறியதாவது:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய சாலைகள் அமைப்பதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் புதிய சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் சென்னை-சேலம் பசுமை வழி திட்டத்திற்கு எதிராக மக்கள் தூண்டிவிடப்பட்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் புரளியையும், வதந்திகளையும் பரப்ப நிறைய பேர் இருக்கிறார்கள்.
தவறான பிரச்சாரங்கள் மூலம் எதிர்ப்புகளை தூண்டிவிட்டால் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வராமல் போய்விடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலைப்பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். கிழக்கு கடற்கரை பகுதியில் அமையும் ரெயில்பாதை திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் துறைமுகப் பணிகள் தொடங்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
திமுக அழிந்துவிடும் என திமுகவே நம்புகிறது. தமிழகத்தின் கிழக்கு மாவட்ட மக்கள் கழகங்களுக்கு வாக்களித்துவிட்டு ஏமாந்து நிற்கின்றனர். பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட் அடிப்பது போன்று சட்டசபையை முக ஸ்டாலின் கட் அடிக்கிறார். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது. ஆனால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு இன்னும் உறுப்பினர் பட்டியலை கூட தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏன் எந்த கேள்வியும் யாரும் எழுப்பவில்லை? ஸ்டாலின் கர்நாடகா சென்று அவர்களின் கூட்டணி ஆட்சியில் இருப்பவர்களிடம் குறைந்தபட்சம் உறுப்பினர் பட்டியலையாவது தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.