ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின் - நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்துள்ளார் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் 10 பேர் கொண்ட குழுவுடன் சந்தித்து பேசினார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் ஆளுநரை சந்திக்க திமுக சார்பில் நேரம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
திமுக, காங்கிரஸ்கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்திக்க உள்ளார் ஸ்டாலின். அப்போது சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவு டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டது.
தினசரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசை மைனாரிட்டி அரசு என்று கிண்டலடித்து வரும் ஸ்டாலின், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
டிடிவி தினகரனுக்கு இப்போது 20 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கருணாஸ் உள்ளிட்ட சில எம்எல்ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கடிதம் கொடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் ஆளுநரை இன்று நேரடியாக சந்தித்து பேசியுள்ளார் ஸ்டாலின். சட்டசபை கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலினுடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், தாமோ.அன்பரசன், எவ வேலு, மா. சுப்ரமணியன், ஜெ.அன்பழகன், பொன்முடி, சேகர்பாபு, காங்கிரஸ் எம்எல்ஏ கே. ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீன் லீக் எம்எல்ஏக்கள் 10 பேர் கொண்ட குழுவினர் சென்றனர்.
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.