சென்னை ஐஐடி மாணவரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்
மாட்டிறைச்சி விழா நடத்தியதாக தாக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவர் சூரஜை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சூரஜை மருத்துவமனையில் நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஆய்வு மாணவர் சூரஜ் ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து சூரஜை சக மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இத் தாக்குதலில் அவரின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது வானகரம் அப்பல்லே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் திமுக எம்.பி., திருச்சி சிவா உடனிருந்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், மாணவர் சூரஜிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகமும், சென்னை மாநகர காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.