காவிரி: தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு- ஸ்டாலின் தகவல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்கள் மனு அளித்தனர்.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். அனைத்துக்கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு செய்வதாக கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வலியுறுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் கடந்த 10 நாட்களாக காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தினார் ஸ்டாலின். காவிரி மீட்பு பயணத்தை முடித்து கொண்டு ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஆளுநரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் திருநாவுக்கரசர், கி.வீரமணி, பாலகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். இதனையடுத்து ஆளுநரை சந்தித்து பேசியது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதனை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். அவரும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை வந்த பிரதமரிடம் முதல்வர், துணை முதல்வர் மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கூறியுள்ளோம். அனைத்துக்கட்சி குழுவினர் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுள்ளோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடியும் வரை காத்திருக்காமல் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.