பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்தினரிடம் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்
7 வயது சிறுமி பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை போரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி ஹாஷினியின் குடும்பத்தினரை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
போரூரை அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. தனியார் பள்ளி ஆசிரியை.
இவர்களின் மகளான ஹாஷினி (7) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தன்வந்த் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹாஷினி குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் அண்மைக்காலமாக இதுபோன்ற வேதனை மிக்க சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு காரணமானவர்களுக்கு உரிய வகையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் யார் முதலமைச்சராக இருப்பது என்ற போட்டி நடந்து கொண்டு இருக்கிறதே தவிர அரியலூர் நந்தினி சம்பவம், சிறுமி ஹாஷினி சம்பவம் குறித்து ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.