'கேப்டன்' விஜயகாந்தை சந்தித்த 'தளபதி' ஸ்டாலின்… அரசியல் பேசவில்லையாம்!
சென்னை: திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.தமிழரசின் மகனும், நடிகருமான அருள்நிதி திருமண அழைப்பிதழை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு தேர்தல் கூட்டணிக்கு போடும் அச்சாரம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாடு சென்றிருந்த விஜயகாந்த் ஞாயிறன்று சென்னை திரும்பினார். விரைவில் விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல விஜயகாந்த்தை இன்று மு.க.ஸ்டாலின் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசினார். தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிழை விஜயகாந்திடம் கொடுத்த ஸ்டாலின், திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்ததோடு, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. திருமண அழைப்பிதழ் கொடுக்க மட்டுமே ஸ்டாலின் வந்து சென்றதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.