நெல்லையில் ஒரே நாளில் 300 கி.மீ. பயணம்... 2 கி.மீ. ஸ்கூட்டரில் சென்று மக்களை சந்தித்த ஸ்டாலின்
நெல்லை : மு.க.ஸ்டாலின், ஒரே நாளில் 10 தொகுதிகளில் 300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மக்களை சந்தித்தார். 2 கி.மீ., தூரத்திற்கு அவர் ஸ்கூட்டரில் சென்றார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க.,பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே, விடியல் மீட்பு பயணம் என்ற பெயரில் தேர்தலுக்கு முந்தைய மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகிறார். முதல்நாள் பயணத்தை அவேர் கன்னியாகுமரியில் துவக்கினார். நேற்று இரண்டாவது நாளாக நெல்லை மாவட்டம் பணகுடியில் பயணத்தை தொடர்ந்தார்.
பணகுடியில் உள்ள தனியார் செங்கல்சூளை மற்றும் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிகளை அவர் பார்வையிட்டார். தொழில் முடக்கம் குறித்து ஸ்டாலினிடம் கூறியவர்கள், களிமண் போன்ற மூலப்பொருள் கிடைப்பதில்லை எனவும், இதற்காக அரசு கெடுபிடி செய்வதாகவும் இதனால் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது...
தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தவேண்டும். தி.மு.க.,ஆட்சியில் வந்தால் தொழிலாளர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மக்களை முதல்வர் நேரில் சந்தித்து குறைகளை கேட்கவேண்டும். ஆனால் அ.தி.மு.க., ஆட்சி ஒரு காணொளி காட்சியாகவே உள்ளது.
தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிக்கும் திட்டங்கள் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கியதோடு, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி வள்ளியூர் சென்றார். வள்ளியூர் பிரதான சாலையில் சிறிது தூரம் நடந்துசென்றார். பின்னர் அங்கிருந்து ஏர்வாடிக்கு சென்றார். அங்குள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். கடை முன்பாக கூடியிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து களக்காடு சென்றார். செல்லும் வழியில் இஸ்லாமிய உலமாக்கள் சிலர் அவருக்கு சால்வையணிவித்து வரவேற்றனர்.
அவர்களை ஸ்டாலின் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சேரன்மகாதேவி சென்றார். செல்லும் வழியில் தி.மு.க.,ஆட்சியின் போது அமல்படுத்தப்பட்டு தற்போது கிடப்பில் கிடக்கும் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் பாதியில் நிற்பதை பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி அம்பாசமுத்திரம் சென்றார். பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கலைக்கல்லூரி வரையிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டர் ஓட்டிச்சென்றார். அவருடன் கட்சியினர், இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர். தொடர்ந்து கோவில்குளம் என்னும் கிராமத்தில் வயலில் இறங்கி வரப்பில் நடந்தார். அங்கிருந்த விவசாயிகளிடம் நிலவும் பிரச்சனைகள் கேட்டறிந்தார். அதே பகுதியில் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த பெண்களிடம் பேசினார்.
அவர்கள் தங்கள் பகுதியில் வேலைவாய்ப்பு இல்லை எனவும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்தனர். பின்னர் ஸ்டாலின் ஆலங்குளம் சென்றார். அங்கு ஒரு திருமண மண்டபத்தில் கூடியிருந்த பீடித் தொழிலாளர்களிடம் பேசி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பீடித் தொழிலாளர்கள், ஆயிரம் பீடி சுற்றுவதற்கு தற்போது 166 ரூபாய் கூலியாக தருகின்றனர். அதனை 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். பீடி நிறுவனங்கள் மூலம் மருத்துவ வசதிகள் செய்துதரவேண்டும். ஓய்வூதிய பென்சனாக மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணாவின் வீட்டிற்கு ஸ்டாலின் சென்றார்.
அங்கிருந்து தென்காசி சென்றார். தென்காசியில் காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தென்காசியில் பிற்பகல் 3 மணியளவில் மதிய உணவு உட்கொண்டார். பின்னர் அங்கு மாவட்ட தொழிலதிபர்கள், முக்கிய நபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், முள்ளிக்குளம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்தார். சங்கரன்கோவிலில் விசைத்தறி ஆலையில் நெசவாளர்கள், தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ரதவீதியில் நடந்துசென்று மக்களை சந்தித்தார்.
செல்வி மகாலில், அரசு ஊழியர்கள், அரசு சாரா அமைப்பினரை ஸ்டாலின் சந்தித்தார். இரவில் நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த நெல்லை மாவட்ட கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 தொகுதிகளில், பணகுடி முதல் நெல்லை வரையிலும் சுமார் 300 கிரோ மீட்டர் தூரம் ஸ்டாலின் பயணித்துள்ளார்.