சசிகலா பெயரை சட்டசபையில் கூறலாமா.. ஸ்டாலின்-செங்கோட்டையன் நேருக்கு நேர் வாக்குவாதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள சசிகலா பெயரை, சட்டசபையில் வைத்து பேசி களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது.
சென்னை: 2017-18 நிதியாண்டு பட்ஜெட்டின்போது அமைச்சர் ஜெயக்குமார் ஆரம்பத்திலேயே அம்மா புகழ் பாடினார். இதன்பிறகு,
மரியாதைக்குறிய பொதுச்செயலாளர் சின்னம்மாவுக்கும், துணை பொதுச்செயலலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ஜெயக்குமார் பேசியதே புரியாத அளவுக்கு திமுக கோஷம் இருந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள சசிகலா பெயரை, சட்டசபையில் வைத்து பேசி களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது. இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்திக்கொண்டார்.
அவை முன்னவரான செங்கோட்டையன் இதுகுறித்து பதிலளிக்க சபாநாயகர் தனபால் கேட்டுக் கொண்டார். இதையடுத்து செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடுவே நடந்த வாக்குவாதம்.
செங்கோட்டையன்: தாங்கள் சார்ந்த கட்சி தலைமையை புகழ்ந்துரைப்பது, சட்டமன்ற மரபு. எங்களால் பழைய உதாரணங்களை எடுத்து காட்ட முடியும். இதெல்லாம் நடைமுறையில் இருந்துள்ளது.
ஸ்டாலின்: கட்சி தலைவர்களை பற்றி பேசுவதை தவறு என நாங்கள் கூறவில்லை. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு விவகாரத்தையே சட்டசபையில் பேசக்கூடாது. அதுகுறித்து பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில், நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரை பற்றி சட்டசபையில் பேசுவது தவறு.
செங்கோட்டையன்: நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் கூட போட்டியிடலாம். அப்படி இருக்கும்போது பேரவையில் பேசுவது தவறு இல்லை.
சபாநாயகர்: திமுக உறுப்பினர்கள் கேள்விக்கு ஆளும் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இத்தோடு இப்பிரச்சினையை விட்டுவிடலாம்.
இவ்வாறு சபாநாயகர் கூறினாலும், செங்கோட்டையன் பொய் தகவல்களை கூறிவருவதாக திமுகவினர் சிறிது நேரம் கோஷமிட்டனர்.